
மதுரை, அனுப்பானடி, தாய் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மனைவி ஜீவகுமாரி. மகள் இன்பலட்சுமி (13), மகன் தனசிங்க பெருமாள் (10). கணவர் இறந்த பின்பு, ஜீவகுமாரி குடும்பம் நடத்த போதிய வருமானமின்றி பரிதவித்து வந்தார். வறுமை சூழல், கணவரை இழந்த விரக்தியால் தீவிர மன உளைச்சலில் இருந்து வந்தார். இவரது வீட்டில் நேற்று அதிகாலை வரை விடிய விடிய வெகு நேரம் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜீவகுமாரி, இன்பலட்சுமி, தனசிங்க பெருமாள் ஆகிய மூவரும் மயங்கிக் கிடந்தனர். மகன், மகளுக்கு விஷம் கொடுத்து, ஜீவகுமாரியும் விஷமருந்தி இருந்தது தெரிந்தது. வீட்டிற்குள் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஜீவகுமாரி, இன்பலட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்தனர். மகன் தனசிங்கபெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். இதன்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, தாய், மகள் தற்கொலைக்கு குடும்ப வறுமை காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.