
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில், ஏசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூறும் வகையில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 5-ந் தேதி சாம்பல் புதன் தினத்துடன் தொடங்கியது. தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதையொட்டி தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.