
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படகில் சென்று பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி சுற்றுலா பயணிகளும் உற்சாகத்துடன் பார்வையிட்டு வந்த 3-வது நாளான நேற்று திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக நாள் முழுவதும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இன்று வழக்கம் போல படகுப்போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.