
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி கட்டாயம் என்பதில் இருந்து 2023 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதி தேர்வுகளில் (செட்) ஏதாவதொரு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அடுத்த ஆறு மாதங்களில் மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியது.
இதையடுத்து பல்கலைக்கழக மானியக்குழுவின் 2009 மற்றும் 2016 வழிகாட்டுதலின் அடிப்படையில் பிஎச்.டி முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியில் இருந்து விலக்கு, இணைப் பேராசிரியராக பதவி உயர் பெற குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், 7 ஆராய்ச்சித் தாள்களை வெளியிட்டிருக்க வேண்டும், பேராசிரியர் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் பணி அனுபவம், குறைந்தபட்சம் 10 ஆராய்ச்சி தாள்களை வெளியிட்டிருக்க வேண்டும், கல்லூரி முதல்வர் பணிக்கு நியமிக்கப்படுவோர் பிஎச்.டி முடிதிருப்பதோடு 15 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் ஆராய்ச்சி படிப்பில் 120 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என வரைவு வழிகாட்டுதலில்படி, பிஎச்.டி கட்டாயம் என்ற நடைமுறை 2018ல் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் பணியமர்த்துவதற்கான தகுதித் தேவையான பிஎச்.டி தகுதியை கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைத்துள்ளது. அதாவது உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி கட்டாயம் என்ற விதிமுறை என்பதில் இருந்து 2023ம் ஆண்டு ஜூலை வரை விலக்கு அளித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, நெட் மதிப்பெண் அடிப்படையிலேயே பணியமர்த்தல் தொடரலாம் என உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை அடுத்து உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வழக்கத்தை விட விரைந்து நிரப்பப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, நெட், செட், சிலட் தேர்வு உள்ளிட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.