Advertiment

கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு

by Editor

கல்வி
கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு இதுவரை கலந்தாய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் 66 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி மாவட்ட அலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் உள்ளார்.

மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாகப் பணிகளைக் கவனித்தல், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்கும் பணிகள் போன்றவைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் தனது அலுவலகத்தின் கீழுள்ள பணியாளர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்கள் பணி உயர்வு பெறுவதன் மூலமும் குறிப்பிட்ட அளவு இப்பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை போன்ற அனைத்து பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share via

More Stories