
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 30) தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
இதனிடையே தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில், ‘தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தற்பொழுதுள்ள நடப்பு கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த மாணவர்களின் விவரங்களை EMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் 450 மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளார். அதே போல மற்ற ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் தனியார் பள்ளி மாணவர்களையும் மறுக்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் ஆய்வகங்கள், கழிவறைகள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.