
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் தாலிபெருக்கும் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் காசி விசுவநாதர் கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தாமிரபரணி நதிக்கு ஆடி 18 தினத்தை முன்னிட்டு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலிகள் வழிபாடு நடத்தினர்.மேலும் மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி18 ஆம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல் ஆடி மாதத்தில் 18-ம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.
அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நெய்வேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் தாமிர பரணி ஆற்றங்கரையில் காசி விசுவநாதர் கோவில் படித்துறையில் திரளான பெண்கள் திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.
அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர்.